குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.
Published on

ஆவடி,

ஆவடி ஜே.பி. எஸ்டேட் முதல் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). அங்குள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருச்சி. இவருடைய மனைவி ஹேமாவதி (25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அஜய் (3) என்ற மகனும், காவியஸ்ரீ (2) என்ற வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மகளும் உள்ளனர்.

முத்துக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல் முத்துகுமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதில் ஆத்திரமடைந்த முத்துகுமார், தனது மனைவியை திட்டியதுடன், அவரை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஹேமாவதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை முத்துக்குமார் தடுத்துவிட்டார்.

பின்னர் முத்துக்குமார் தனது மகன், மகளுடன் படுக்கை அறைக்குள் சென்று தூங்கிவிட்டார். இரவில் எழுந்துபார்த்த போது தனது மனைவி ஹேமாவதி, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

முத்துக்குமார் தங்கள் மகளை அடித்து கொடுமைப்படுத்தியதால்தான் அவள் தற்கொலை செய்து கொண்டதாக ஹேமாவதியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஹேமாவதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com