ஆடி அமாவாசை விழாவுக்கு சென்ற இடத்தில் தகராறு, பீர் பாட்டிலால் தலையில் அடித்து வாலிபர் கொலை

ஆடி அமாவாசை விழாவுக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் தலையில் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Published on

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடந்து வருகிறது. சதுரகிரி வரும் பல பக்தர்கள் மாவூற்றில் உதயகிரிநாதரை தரிசித்து கிடாய் வெட்டி அன்னதானம் வழங்குவது வழக்கம். அங்கு வத்திராயிருப்பு அருகே உள்ள ஆகாசம்பட்டியை சேர்ந்த ராம்குமார் (வயது21) தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அங்கு மதுரையை சேர்ந்த சிலர் கும்பலாக வந்துள்ளனர்.

அப்போது ராம்குமாருக்கும், மதுரையை சேர்ந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், பீர் பாட்டிலால் ராம்குமாரை சரமாரியாக தலையில் அடித்து உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், வத்திராயிருப்பு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. அங்கு ராம்குமார் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ராம்குமாரின் உடலை பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்தார். பீர் பாட்டிலால் ராம்குமாரை தலையில் அடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com