வாலிபர் மகேந்திரன் உயிரிழந்த வழக்கு: தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

வாலிபர் மகேந்திரன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் வடிவு. இவருடைய மகன் மகேந்திரன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரை விசாரணைக்காக சாத்தான்குளம் போலீசார் அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சில நாட்களில் மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதனால் போலீசார் தாக்கியதால்தான் தனது மகன் இறந்து இருப்பதாகவும், இதற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரி, மதுரை ஐகோர்ட்டில் தாயார் வடிவு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதனால் வழக்கு ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமாரிடம் நேற்று ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர்கள் நேற்று மாலையில் தூத்துக்குடி கே.வி.கே.நகரில் உள்ள மகேந்திரனின் அக்காள் சந்தனமாரியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு பூட்டி இருந்தது.

இதுதொடர்பாக சந்தனமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு மகேந்திரனின் தாயார் வடிவுவிடம் விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வடிவு வரவில்லை. இதையடுத்து அவரிடம் இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதற்காக சம்மன் வழங்கி விட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com