

புதுச்சேரி
புதுவையில் 502 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார்.
கொரோனா தொற்று
புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அவ்வப்போது உயிரிழப்புகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,217 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 63 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. அதில் 33 பேர் புதுச்சேரியையும், 26 பேர் காரைக்காலையும், மாகி, ஏனாமை சேர்ந்த தலா 2 பேரும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று 88 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 15 பேர், வீடுகளில் 487 பேர் என 502 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
மூதாட்டி பலி
இந்தநிலையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோரிமேடு காமராஜ் நகரை சேர்ந்த 85 வயதான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,971 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 5.18 சதவீதமாகவும், குணமடைவது 98.58 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 191 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,376 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 4 ஆயிரத்து 36 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 21 லட்சத்து 83 ஆயிரத்து 151 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.