

புதுச்சேரி
புதுச்சேரியில் புதிதாக 86 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
மூதாட்டி பலி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 86 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரியில் 61 பேரும், காரைக்காலில் 21 பேரும், ஏனாமில் 3 பேரும், மாகியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 97 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 12 பேர், வீடுகளில் 488 பேர் என 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,973 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி
புதுவையில் தொற்று பரவல் 5.73 சதவீதமாகவும், குணமடைவது 98.58 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 106 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,099 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 3 ஆயிரத்து 103 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 21 லட்சத்து 92 ஆயிரத்து 795 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.