

திருநெல்வேலி,
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதப்பிறப்பன்று சித்திரைவிசு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரைவிசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கொடிமரம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் காலை மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கினறனர். 9-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறும். வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சித்திரை விசு திருவிழா நடைபெறும். அன்று இரவு தெப்பத்தில் சுவாமி- அம்பாள் வலம் வருவர். தொடர்ந்து இரவு 1 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான சுவாமி- அம்பாள் திருமணக்கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சியளித்தல் நடைபெறும்.