கவர்னர் தன் உரையை மாற்றி படிக்க முடியுமா..?

கவர்னர் உரையில்லாமல் சட்டசபை கூட்டத்தொடரை தொடங்குவதும் எளிதல்ல. அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்.
கவர்னர் தன் உரையை மாற்றி படிக்க முடியுமா..?
Published on

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியும், மாநில சட்டசபைகளில் கவர்னர்களும் ஆற்றும் பங்கு குறித்து அரசியல் சட்டம் தெளிவான பாதைகளை வகுத்து தந்துள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனாதிபதியின் உரையோடும், சட்டசபைகளில் கவர்னர்களின் உரையோடும் தொடங்குகிறது.

ஜனாதிபதி உரையில் இத்தனை ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக அனைத்து சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களைப் பொறுத்தமட்டிலும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் கவர்னர்களுக்கும், அரசுக்கும் இடையே இணக்கமான உறவு இருப்பதால் சட்டசபையிலும் அதுவே எதிரொலிக்கிறது. ஆனால் பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் மட்டும் கவர்னர்களுக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உரசல் அனைத்து செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டையாகவே இருக்கிறது.

குறிப்பாக சட்டசபையில் கவர்னர் உரையின்போதும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தின்போதும் அது பிரதிபலித்து விரிசலை ஏற்படுத்துகிறது. கடந்த மாதம் கர்நாடக சட்டமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற வந்த அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட், மாநில மந்திரிசபை தயாரித்த உரையின் சில வரிகளை மட்டும் படித்துவிட்டு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டார்.

கவர்னர் தன் ஜனநாயக கடமையில் இருந்து மீறிவிட்டார் என்று முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டினார். அங்கு நடந்தது இதுவென்றால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு படி மேலே போய், உரையை படிக்காமலேயே வெளிநடப்பு செய்தார். அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படித்து பின்பு அது அவை குறிப்பில் ஏற்றப்பட்டது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆளும் அரசு இருக்கிறது. அங்கு சட்டசபை கூட்டத்தில் கவர்னர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் அரசு தயாரித்த உரையை அப்படியே படிக்காமல் பல பகுதிகளை விட்டு படித்தார்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கவர்னர் உரையில்லாமலேயே கூட்டத்தொடர் நடக்கவேண்டும் என்று கருத்துகள் வெளிவந்துள்ளன. தமிழக சட்டசபையில் கவர்னர் உரை இல்லாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவேண்டும் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமா? என்பது கேள்விக்குறிதான்.

ஏனெனில் அரசியல் சட்டத்தின் 176-வது பிரிவின்படி சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னரின் உரையுடன்தான் தொடங்கப்படவேண்டும். ஆனால் கவர்னர் அவராகவே தன் உரையை தயாரித்து படித்து விடமுடியாது. மாநில மந்திரி சபை தயாரித்துக் கொடுக்கும் உரையையே அவர் படிக்கவேண்டும். மாநில அரசு தயாரித்த உரையை படிக்க கவர்னர் மறுத்தாலோ. குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் படித்தாலோ அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட அவர் அரசியல் சட்டத்தின் 176-வது பிரிவுக்கு ஏற்றவகையில் நடந்துக்கொள்கிறார் என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மக்களவையின் முன்னாள் செயலாளர் பி.டி.டி.ஆச்சாரி கூறுகிறார்.

அதேநேரம் கவர்னர் உரையில்லாமல் சட்டசபை கூட்டத்தொடரை தொடங்குவதும் எளிதல்ல. அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரவாக வாக்களிக்கவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கு மேல் உள்ள மாநில சட்டசபைகளில் இதற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும். ஆக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்தால் மட்டுமே சாத்தியமே தவிர, எதிர்க்கட்சிகள் மட்டும் நினைத்தால் இதைக் கொண்டுவரவே முடியாது. எதிர்ப்பை காட்டவேண்டும் என்பதற்காக மட்டுமே பேசிக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com