தொழில் கொள்கை 2.0 தயாரிப்பில் அமைச்சர் கீர்த்தனா

‘லிங்ட்- இன்’ வலைதளம் வேலை, தொழில், வணிகம், திறமை மற்றும் தொழில்முறை தொடர்புகளுக்கானது.
தொழில் கொள்கை 2.0 தயாரிப்பில் அமைச்சர் கீர்த்தனா
Published on

த.வெ.க. அரசு பதவியேற்ற 100-வது நாளுக்குள் மேலும் 60 நிறுவனங்களிடம் இருந்து ஈர்த்து, ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளாக ஆக்கவேண்டும் என்பதை இலக்காக வைத்து அமைச்சர் கீர்த்தனா காய் நகர்த்தி வருகிறார்.

பிரபலங்களின் அறிவிப்புகளையெல்லாம் இப்போது சமூக வலைதளங்களில்தான் பார்க்க வேண்டியது இருக்கிறது. 'எக்ஸ்' தளத்தை தாண்டி இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் சென்றுவிட்டனர். தங்கள் எண்ணங்கள் இளைய சமுதாயத்தை, குறிப்பாக 'ஜென் சி'யை சென்றடைய வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் அவர்களோடு தொடர்புகொள்ள முடியும் என்பதை புரிந்துகொண்ட காரணத்தால்தான் பிரதமர் நரேந்திர மோடி தன் மந்திரிசபையில் உள்ள மந்திரிகள் அனைவரையும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, அவரும் இன்ஸ்டாகிராமில்தான் அனைத்து கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா ஒருபடி மேலே போய்விட்டார். அவரது அறிவிப்புகளை சமூக வலைதளங்களில் மட்டுமே பொதுமக்களுக்கு தெரிவித்து வந்த அவர், இப்போது 'லிங்ட்-இன்' மூலமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த 'லிங்ட்-இன்' என்பது சாதாரண வலைதளம் அல்ல. எளிமையாக சொன்னால் வேலை, தொழில், வணிகம், திறமை மற்றும் தொழில்முறை தொடர்புகளுக்கான உலகளாவிய சமூக வலைதளம் இது. வேலை தேடுபவர்கள் முதல் பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வரை ஒரே இடத்தில் தங்கள் தொழில்முறை அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த உலகளாவிய சமூக வலைதளம் அமெரிக்காவில் 2002-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2003-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

சமூக வலைதளங்கள் அந்தக் காலகட்டத்தில் கோலோச்சாத நிலையிலேயே, மக்களின் தொழில்முறை வாழ்க்கைக்கென தனியாக ஒரு இணையதள வலைப்பின்னல் இருந்தால் எப்படி இருக்கும்? என்ற அடிப்படைக் கருத்தில் இருந்துதான் இந்த 'லிங்ட்-இன்' உருவானது. 'பேஸ்புக்'கில் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான, நண்பர்கள், புகைப்படங்கள், பதிவுகள் இருக்கலாம். ஆனால் 'லிங்ட்-இன்'னில் தொழில்முறை வாழ்க்கைதான் இருக்கிறது. இப்போதெல்லாம் திறமையுள்ள இளைஞர்கள் வேறு எங்கும் வேலைக்கு விண்ணப்பிப்பது இல்லை. ‘லிங்ட்-இன்'னில் தங்கள் பெயர்களை, தகுதிகளோடு பதிவு செய்துகொண்டாலே பெரிய நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன. தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. தொழில் கொள்கை 2.0-வை உருவாக்குவதற்காக முதல் முறையாக 'லிங்ட்-இன்' தளத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அவர் குறிப்பாக தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், நிறுவன உரிமையாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடம் அவர்களின் கருத்துகளை கேட்டிருக்கிறார்.

தமிழக அரசு எதை சரியாக செய்கிறது?, எங்கே தவறு இருக்கிறது? என்பதை தெரிவியுங்கள். வெறும் பாராட்டு வேண்டாம். சரியான கருத்துகளை தெரிவியுங்கள். உங்கள் யோசனைகளை சொல்லுங்கள், அரசின் செயல்பாடுகளை கேள்வி கேளுங்கள், என்ன மாற்றங்கள் தேவை என்று கூறுங்கள். அதே நேரத்தில் விவாதங்கள் எல்லாமே அர்த்தமுள்ளதாக, பொதுவானதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தொழில் கொள்கையை உருவாக்க தொழில்துறையினரின் பங்களிப்பு, ஆலோசனை வேண்டும் என்ற முன்னெடுப்பு இருப்பது பாராட்டுக்குரியது. ஆக, இந்த தொழில் கொள்கையை தலைமைச் செயலகத்தில் ஒரு அறையில் அமர்ந்து அதிகாரிகளோடு மட்டும் ஆலோசனை நடத்தி உருவாக்காமல், தொழில் அதிபர்கள், வல்லுனர்கள் ஆகியோரின் கருத்துகளையும் 'லிங்ட்-இன்' மூலமாக அமைச்சர் கீர்த்தனா பெறுவது நிச்சயமாக பலன் அளிக்கும். மேலும் இது ஒரு புதுமையான முயற்சியாகவும் இருக்கும். த.வெ.க. அரசு பதவியேற்ற 100-வது நாளுக்குள் மேலும் 60 நிறுவனங்களிடம் இருந்து ஈர்த்து, ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளாக ஆக்கவேண்டும் என்பதை இலக்காக வைத்து அமைச்சர் கீர்த்தனா காய் நகர்த்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com