

‘ஜென் சி' தலைமுறையை பெரும்பான்மையாகக் கொண்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். மாணவர்களின் போராட்டத்தால் மந்திரி ராஜினாமா செய்தது இதுவே முதல் முறையாகும். இதேபோல ஒரு கோரிக்கைக்காகத்தான் ஜார்கண்ட் மாநிலத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நடந்த போராட்டத்தில் அரசியல் கலந்துவிடாமல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மிகவும் கவனமாக இருந்தது. அந்த போராட்டத்தைப் பா.ஜனதா வெளிப்படையாக எதிர்க்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருப்பது மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
மும்பையில் 2 ஆயிரம் 'ஜென் சி' (1997 முதல் 2012-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள்) மற்றும் 'ஜென் ஆல்பா' (2013 முதல் 2025-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள்) இளைஞர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும்போது, முழுக்க முழுக்க இந்த வயதினர் நடத்திய போராட்டங்கள் பேச்சுவார்த்தைக்கான வழிதான் என்று குறிப்பிட்டார். ஜனநாயகத்தில் போராட்டங்கள் என்பது நியாயமான பேச்சுவார்த்தைதான். ஒரு தலைமை என்பது வெறுமனே மேடைகளில் முழங்கிவிடுவதும், தேர்தலில் வெற்றி பெறுவதும், மக்களுக்கு போதனை வழங்குவதும் மட்டுமல்ல.
உண்மையான தலைவர்கள் தங்கள் பணிகளை பின்னால் இருந்துகொண்டு ஆற்றுவதும், அங்கு இருந்து வழி நடத்துவதும்தான். ஜந்தர் மந்தர் போராட்டத்தை பொறுத்தமட்டில் மாணவர்களுக்கு இருந்த குறைகள், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானதுதான். அவர்களின் போராட்டம் கல்வியில் இப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களைத்தான் கோடிட்டுக் காட்டியது.
ஒவ்வொரு ஜனநாயகத்திலும் பேச்சுவார்த்தை என்பது மிக முக்கியமானது. மாணவர்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது. அது நடக்காத நேரத்தில்தான், மாணவர்கள் தங்கள் குரலை ஓங்கி எழுப்ப வேண்டியது இருக்கிறது. எனவேதான் போராட்டம் என்பது ஒருமித்த உணர்வை உருவாக்குவதற்கான வழியாகுமே தவிர, பிரிவுகளை உருவாக்குவதற்காக அல்ல. நான் ஒருபோதும் 'ஜென் சி' தலைமுறையினர் போராடவே கூடாது என்று சொல்லமாட்டேன். இளம் தலைமுறையினர் பல பிரச்சினைகளை சந்திப்பதால்தான் தங்கள் குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த கண்ணோட்டத்தில்தான் இந்த போராட்டத்தைப் பார்த்து, அதையெல்லாம் தீர்த்துவைக்க வேண்டும். 'ஜென் சி' இளைஞர்கள் நமது சொந்த குழந்தைகள். அவர்கள் ஒரு விவகாரத்துக்காக போராடினால் எப்படி தேச விரோத சக்திகளாகிவிடுவார்கள். அவர்கள் பிரச்சினைகளை கேட்கவேண்டும். 'ஜென் சி', 'ஜென் ஆல்பா' இளைஞர்களை கண்களைமூடிக்கொண்டு நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் நேர்மையான தலைமுறைகள்.
அதுபோல இளைஞர்களும் அரசு வேலையைத் தாண்டி தொழில்முனைவோர் ஆகவேண்டும். கல்வி என்பது 'ஜென் சி' தலைமுறையை உருவாக்குவதற்காகத்தானே தவிர பணம் சம்பாதிப்பதற்காக இல்லை. அந்தவகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக செலவழிக்க வேண்டும் என்ற இளைஞர்களின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன்.
ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எல்லாம் மோகன் பகவத் ஆதரவு குரலை எழுப்பியது நாடு முழுவதையும் உற்று நோக்க வைத்துள்ளது. எந்த கட்சிகள் ஆதரவு குரலை எழுப்பினாலும் 'ஜென் சி' இளைஞர் சமுதாயம் மகிழ்ச்சி அடையும், வரவேற்குமே தவிர எந்தப்பக்கமும் சாய்ந்துவிடாது. என்றாலும் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவரின் ஆதரவு நிலைப்பாடு அரசியல் உலகில் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.