வந்து விட்டது ஹைட்ரஜன் ரெயில்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை தொழில்நுட்பமாக ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு, அதில் வெற்றியையும் பெற்றுள்ளது.


வந்து விட்டது ஹைட்ரஜன் ரெயில்
Published on

"சிக்கு புக்கு ரெயிலே...”என்று திரைப்பட பாடல்களில் இடம்பெற்ற நிலக்கரியில் இயங்கும் நீராவி ரெயில்கள், இந்தியாவில் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்தன. பின்னர் படிப்படியாக டீசல் எரிபொருளில் இயங்கும் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. டீசல் பயன்பாடு அதிகரித்ததால், அதற்கு மாற்றாக மின்சார ரெயில்கள் நடைமுறைக்கு வந்தன. தண்டவாளத்தின் மேலே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெற்று இந்த ரெயில்கள் சீறிப்பாய்கின்றன. தற்போது இந்தியாவில் 99.6 சதவீத ரெயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை தொழில்நுட்பமாக ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு, அதில் வெற்றியையும் பெற்றுள்ளது.

"மேக் இன் இந்தியா” திட்டத்தின் அடிப்படையில், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி, அரியானா மாநிலத்தில் வடக்கு ரெயில்வேயின் ஜிந்த் சோனிபட் இடையேயான 83 கிலோமீட்டர் வழித்தடத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது மிகப்பெரிய சாதனையாகும். ஏனெனில், உலகில் ஹைட்ரஜன் ரெயில் தொழில்நுட்பம் அறிமுகமாகி சில ஆண்டுகளே ஆகியுள்ளன. ஜெர்மனிதான் முதன்முதலில் ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்தியது. தற்போது பிரான்சு, இத்தாலி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹைட்ரஜன் ரெயில்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளில் 2 முதல் 4 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரெயில்களே இயக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் 10 பெட்டிகளை இழுத்துச் செல்லும் வகையில் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகளை சுமந்து செல்லும் திறன் இதற்கு உள்ளது.

இந்த ரெயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்படி வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் முதல் மற்றும் கடைசி பெட்டிகள் ஹைட்ரஜன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையங்களாக செயல்படுகின்றன. இந்த பெட்டிகளில் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் இணைந்து எரிபொருள் செல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியாகும் மின்சாரம் லித்தியம்-அயன் பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு, அதன் மூலமே ரெயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு மின் உற்பத்திப் பெட்டிகளும் தலா 1,200 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அந்த மின்சாரமே ரெயிலை இயக்குகிறது. இந்த ரெயிலை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்தவேண்டும். ஏனெனில், ஹைட்ரஜனுக்கு நிறமும் இல்லை, மணமும் இல்லை. மேலும், அது மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டது. இதனால் மிகுந்த பாதுகாப்புடன் ரெயிலை கையாளவேண்டும்.

இருப்பினும், லேசான ஹைட்ரஜன் கசிவை கூட உடனடியாக கண்டறியும் வகையில் இந்த ரெயிலின் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் கசிவு, தீப்பொறி போன்றவை கண்டறியப்பட்டால், ரெயில் தானாகவே நின்றுவிடும் வகையில் பாதுகாப்பு அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. ரெயிலில் இருந்து நீராவி மட்டுமே வெளியேறும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது. நாடு முழுவதும் ஹைட்ரஜன் ரெயில்களை இயக்கும் நிலை உருவானால், ரெயில்வே மின்மயமாக்கலுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மற்ற தொழில்துறைகளுக்குப் பயன்படுத்தமுடியும். இதன்மூலம் புதிய தொழிற்சாலைகள் உருவாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமடையும் வாய்ப்பும் உள்ளது. ஆக, ஒவ்வொரு ரெயிலும் தன்னுடைய மின்சாரத்தைத் தானே உற்பத்தி செய்து இயங்குவது. இந்தியன் ரெயில்வே தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com