ஊராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் முற்றுகை

வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஊராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் முற்றுகை
Published on

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகேயுள்ள குதுப்பணம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஆழ்துளை கிணறு வறண்டு விட்டது. இதனால் கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து திண்டுக்கல்லுக்கு செல்லும் காவேரி கூட்டுகுடிநீர் குழாயில் ஒரு திருகு குழாய் அமைக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் நடந்து சென்று அதில் குடிநீர் பிடித்து வருகின்றனர். இதனால் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு கொடுத்தனர். எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தொட்டணம்பட்டியில் உள்ள நல்லமனார்கோட்டை ஊராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முனியப்பன், பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் சிக்கனன், விவசாய சங்க தலைவர் பிச்சைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com