சென்னையின் பிறந்தநாள் இன்று...அதன் வரலாறு..!

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்... அந்த பெருமைக்கு சொந்தம் கொண்டாடுவதில் தலைநகர் சென்னைக்கும் முக்கிய பங்கு உண்டு.
இன்றைக்கு தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையான 8 கோடி பேரில், ஒரு கோடிக்கும் அதிகமானோர் சென்னை மற்றும் புறநகர் பகுதியில்தான் வசித்து வருகின்றனர்.
இன்றைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வழிதேடி வந்தவர்களுக்கு வாழ்வு தரும் சென்னை, அன்றைக்கு கடல் கடந்து வந்த வெளிநாட்டவர்களையும் அந்நியர்கள் என்று பாராமல் வாழ வைத்திருக்கிறது.
சென்னை மாநகரம் முழுவதும் பெரிய.. பெரிய.. கட்டிடங்கள் வானுயர மிடுக்காக நிமிர்ந்து நின்றாலும், ஆங்காங்கே பாரம்பரிய கட்டிடங்களும் கலைநயம் மாறாமல் நயமாக கடந்த கால வரலாற்றை பறைசாற்றி நிற்பதை காண முடிகிறது.
இப்படி பழையன, புதியன கலந்த கலவையாக இருக்கும் சென்னை மாநகரம் இன்றைக்கு (ஆகஸ்ட் 22) தனது 386-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என்று காலவோட்டத்தில் பெயர்கள் மாறினாலும், இன்றைக்கு சென்னை என்ற பெயருடன் நவீன இந்தியாவின் அடையாளமாக காட்சி அளிக்கிறது.
இந்தியாவின் 4-வது பெரிய நகரம், உலகின் 31-வது பெரிய நகரம் என்ற சிறப்புகளையும் சென்னை கொண்டுள்ளது. மதராஸ் பட்டணமாக 386 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது,1639-ம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 22) சென்னை தோற்றுவிக்கப்பட்டது.
சென்னப்ப நாயக்கர் என்பவரின் மகன் வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனியை தொடங்குவதற்காக பிரான்சிஸ்டே என்பவர் இப்போதைய புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் நிலத்தை எழுதி வாங்கினார்.
வெங்கடப்ப நாயக்கரின் ஆசைப்படி, தந்தையின் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, மதராஸ் பட்டணம் என்ற பெயர் சென்னப் பட்டணமாக மாற்றப்பட்டது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Explore