

கோடை வெயிலின் உச்சத்தில் உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நேரத்தில் சில உணவுகள் மற்றும் காய்கறிகள் உடலில் கூடுதல் வெப்பத்தை உருவாக்கி, நீரிழப்பு மற்றும் செரிமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
இஞ்சி மற்றும் பூண்டு: இஞ்சி, பூண்டு ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. ஆனால் இவற்றில் உள்ள ஜிஞ்சரால், அலிசின் போன்ற சேர்மங்கள் உடலில் வெப்பத்தை அதிகரிக்கக்கூடும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றெரிச்சல் மற்றும் நீரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோடைகாலத்தில் அளவோடு பயன்படுத்துவது நல்லது.
பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய்: மிளகாய்களில் உள்ள கேப்சைசின் உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது. அதிக கார உணவுகள் செரிமான பாதையில் எரிச்சலை ஏற்படுத்தி அசிடிட்டி மற்றும் வயிற்று எரிச்சலை உருவாக்கக்கூடும்.
சில கீரை வகைகள்: பாலக்கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். கடுகுக்கீரை போன்றவை உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியவை. அதற்கு பதிலாக சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
வெங்காயம்: வெங்காயம் குளிர்ச்சியளிக்கும் என்றாலும், அதில் உள்ள கந்தகச் சேர்மங்கள் சிலருக்கு வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். வெங்காயத்தை தண்ணீர் அல்லது வினிகரில் ஊறவைத்து பயன்படுத்தினால் செரிமானம் எளிதாகும்.
மாவுச்சத்து அதிகமுள்ள வேர்க்காய்கறிகள் செரிக்க சற்று கடினமானவை. கோடைக்காலத்தில் இவை வயிறு உப்புசம் மற்றும் சோர்வை ஏற்படுத்தக்கூடும்.
கேரட் மற்றும் முள்ளங்கி: இவை குளிர்காலப் பயிர்கள் என்பதால், கோடைக்கால காய்கறிகளைப் போல அதிக நீர்ச்சத்து கொண்டதல்ல. அதிகமாக எடுத்துக்கொண்டால் செரிமானத்திற்கு கூடுதல் நீர் தேவைப்படும்.
கோடைக்காலத்தில் சிறந்த தேர்வுகள்: தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம், சுரைக்காய், இளநீர், மோர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்வது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்..