

மும்பை,
கசாரா ரெயில் நிலையத்தில் ரெயில் சக்கரத்தில் சிக்கி போலீஸ்காரர் பலியானார்.
பயணிகளுக்கு உதவி
மத்திய ரெயில்வே வழித்தடமான கசாரா ரெயில் நிலையத்தில் நேற்று காலை ரெயில்வே போலீஸ்காரர் திலீப் சோனாவானே (வயது53) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். காலை 6.49 மணிக்கு எல்.டி.டி.- கான்பூர் எக்ஸ்பிரஸ் கசாரா ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது சில பயணிகள் போலீஸ்காரரை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் இருந்த திலீப் சோனாவானே பயணிகளுக்கு உதவ ரெயிலில் ஏறினார். அவர் பயணிகளிடம் குறைகளை கேட்டுவிட்டு திரும்புவதற்குள் ரெயில் அங்கு இருந்து புறப்பட்டது.
தவறி விழுந்து பலி
இதையடுத்து திலீப் சோனவானே ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கு இடையே உள்ள இடைவெளியில் தவறி விழுந்தார். இதில் அவா ரெயில் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். ரெயில்வே போலீசார், போலீஸ்காரரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.