புதுச்சேரி ரவுடிக்கு 20 ஆண்டு சிறை

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுச்சேரி ரவுடிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுச்சேரி ரவுடிக்கு 20 ஆண்டு சிறை
Published on

புதுச்சேரி

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுச்சேரி ரவுடிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பாலியல் பலாத்காரம்

புதுச்சேரி துப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லெனின் சைமன் ஜீன் என்ற ரோமார்க் சைமன் ஜீன் (வயது 26). தனியார் நிறுவன காவலாளி. இவர் உழவர்கரை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது அவருடன், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோமார்க் சைமன் ஜீனை கைது செய்தனர். அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் சிறுமியை திருமணம் செய்துகொண்டாராம்.

20 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நீதிபதி சோபனாதேவி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் ரோமார்க் சைமன் ஜீன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார்.

சிறை தண்டனை பெற்ற ரோமார்க் சைமன் ஜீன் ரவுடி ஆவார். அவர் வாணரப்பேட்டையில் 2021-ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com