யெஸ் வங்கி முறைகேட்டில் புனே கட்டுமான அதிபர் கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை

யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் புனே கட்டுமான அதிபரை அமலாக்கத்துறை கைது செய்தது.
யெஸ் வங்கி முறைகேட்டில் புனே கட்டுமான அதிபர் கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை
Published on

மும்பை, 

யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் புனே கட்டுமான அதிபரை அமலாக்கத்துறை கைது செய்தது.

யெஸ் வங்கி முறைகேடு

யெஸ் வங்கியின் நிறுவனரும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராணா கபூர் பணமோசடி வழக்கில் 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மூலம் ராணா கபூர், யெஸ் வங்கியின் இணை நிறுவனர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (டி.எச்.எப்.எல்.) நிறுவனர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர் ரூ.5 ஆயிரத்து 50 கோடியை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

கட்டுமான அதிபர் கைது

இந்த வழக்கில் புனேயை சேர்ந்த ஏ.பி.ஐ.எல். கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அவினாஷ் போசலேயை சி.பி.ஐ. கைது செய்து உள்ளது. அவர் தற்போது மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் யெஸ் வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவினாஷ் போசலேயை நேற்று முன்தினம் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையை அடுத்து நேற்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.

கைதான அவினாஷ் போசலே ஆட்டோ டிரைவராக இருந்து கட்டுமான அதிபராக உயர்ந்தவர். யெஸ் வங்கி முறைகேட்டில் அவருக்கு ரூ.360 கோடி கிடைத்ததாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com