

ஆண்டிப்பட்டி,
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி தேனி மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து வைகை அணை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி நகரில் பஸ் நிலையம், மருத்துவமனை, கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டுகளை கண்டறியும் பயிற்சி பெற்ற வெற்றி என்ற மோப்பநாயும் சோதனையின் போது போலீசாரால் பயன்படுத்தப்பட்டது. இதே போல் பொது இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் பைகள் மற்றும் பொருட்களை யாரும் தொடக்கூடாது. சந்தேகப்படும்படி நடமாடும் நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.