

பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கடுமையான கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் தொடங்கிய பின்பு நடவடிக்கைகள் எடுப்பதுடன், அதற்கு முன்பாகவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது. மாநிலத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்துவது, முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகளிலும் மாற்றம் செய்யப்படும்.
மாநிலத்தில் கொரோனா முதல் அலை மற்றும் 2-வது அலையை எதிர் கொண்டதன் மூலம், அரசுக்கு பல அனுபவம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் நிபுணர்கள் குழுவினர், அரசுக்கு எந்த மாதிரியான ஆலோசனைகளை வழங்குகிறார்களா?, அதன்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும். கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு, கர்நாடகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
முன் மாதிரி மாநிலம்
தொழில்துறை, கொரோனாவை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கர்நாடகம் உள்ளது. நமது மாநிலம் எடுக்கும் நடவடிக்கைகளை, மற்ற மாநிலங்கள் பின்பற்றுகிறது.
நாளை (அதாவது இன்று) மாநிலம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்ட சுதந்தின விழா கொண்டாடப்படும். மாநில மக்களுக்கு எனது சுதந்திர தின விழா வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.