ரூ.30 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் பறிமுதல்

திருச்சியில் பிரபல நிறுவனம் பெயரில் போலியாக விற்பனை செய்யப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான 50 டன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.30 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் பறிமுதல்
Published on

திருச்சி, ஆக.29-
திருச்சியில் பிரபல நிறுவனம் பெயரில் போலியாக விற்பனை செய்யப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான 50 டன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிர சோதனை
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் கடந்த சில நாட்களாக திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி உறையூர் காசிவிளங்கி பகுதியில் இயங்கும் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் தடவிய 650 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
பிரபல நிறுவனம் பெயரில்...
இந்த நிலையில் நேற்று திருச்சி மாநகரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக சாக்கு பைகள் தயாரித்து, அவற்றில் உள்ளூர் அரிசியை மூட்டைகளில் அடைத்து கடை மற்றும் குடோன்களில் விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவிற்கு புகார் வந்தது.
அவரது உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல் துறையினர், வணிகவரி துறையினர் கொண்ட குழுவால் திருச்சி காந்தி மார்க்கெட்-தஞ்சை சாலை, பாலக்கரை, எடத்தெரு உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டன.
அப்பகுதியில் உள்ள 8 மொத்த விற்பனை அரிசி கடைகள், 8 அரிசி மண்டி குடோன்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
ரூ.30 லட்சம் மதிப்பு
அப்போது, அங்கு பிரபல கர்நாடகா அரிசி என்று சொல்லப்படும் 'மஞ்சு கொட்டான் நவாப்' என்ற நிறுவனத்தின் பெயரில் அரிசிகள் தயாரித்து போலியாக விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போலியாக பைகள் தயாரிக்கும் ஒரு அச்சக கடையும் ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆய்வின் போது சுமார் 50 ஆயிரம் கிலோ அரிசி மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும். இதேபோல் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக அச்சிடப்பட்ட 6 ஆயிரம் சாக்கு பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் சொந்த பிணை பத்திரம் போடப்பட்டு, அவற்றை விற்பனை செய்தவர்களின் பாதுகாப்பிலேயே வைக்கப்பட்டன.
மாதிரிகள் சேகரிப்பு
மேலும் 7 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை மேல்நடவடிக்கைக்காக மாவட்ட கலெக்டருக்கு ஆவணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் இதுபோன்ற போலியான உணவு பொருட்களோ அல்லது கலப்பட உணவு பொருட்களோ விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களும் கலப்பட உணவு பொருட்கள் கண்டறியப்பட்டால், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com