

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பு மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் வேடசந்தூர், வடமதுரை, கரூர் மாவட்டம் ஈசநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்தனர். இதுதவிர திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், ஊட்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்தனர். இதற்கிடையில் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த நவம்பர் மாதம் திடீரென மில் மூடப்பட்டது. இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அதற்கு முன்னதாக 3 மாதங்களுக்கு முன்பு வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் மில்லின் கேட் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களிடம், மில்லின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிர்வாகத்திடம் பேசி சம்பளம் பெற்று தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.