

புதுச்சேரி,
புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் அமெரிக்கா சென்றிருந்தார். 3 மாதம் அமெரிக்காவில் தங்கி இருந்த அவர் நேற்று நள்ளிரவில் புதுச்சேரி திரும்பினார். நேற்று காலை சபாநாயகர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.
அவர்கள் இருவரும் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக அவர்கள்பேசியதாக தெரிகிறது. அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மரியாதை நிமித்தமாக...
இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறும்போது, சபாநாயகர் அமெரிக்கா சென்றுவிட்டு புதுவை திரும்பி உள்ளார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன் என்றார்.
சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் நிருபர்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளதாக பாரதீய ஜனதா கட்சியினர் தெரிவித்த விவரங்கள் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியதாவது:-
விரைவில் முடிவு
நான் இப்போதுதான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளேன். மத்திய அரசு என்ன விவரம் அனுப்பி உள்ளது என்று எனக்கு தெரியாது. அதை அலுவலகம் சென்றுதான் பார்க்கவேண்டும்.
அதில் உள்ள விவரங்கள் குறித்து அறிந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும். எதுவாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.