பெயர்கள் வேறு.. விழா ஒன்றுதான்.. பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்


பெயர்கள் வேறு.. விழா ஒன்றுதான்.. பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்
x

அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டை பொருத்தவரை போகியில் தொடங்கி காணும் பொங்கலில் முடிகிறது.

உலக உயிர்களுக்கு ஒளி தரும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை. தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைத் திருநாள், ஒவ்வொரு வருடமும் தை மாதப்பிறப்பன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் மகர ராசிக்கு மாறும் நாளான மகர சங்கராந்தி நாளில் இந்த பண்டிகை வருகிறது.

அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டை பொருத்தவரை போகியில் தொடங்கி காணும் பொங்கலில் முடிகிறது. முதலில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளில் இந்த பண்டிகை வருகிறது. இந்நாளில் வீட்டில் உள்ள பழைய மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களை தீ வைத்து எரிப்பது வழக்கம். இரண்டாவது நாள் தைப்பொங்கல். இந்நாளில் அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து புதிய பானையில் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கலை சமைத்து சூரிய பகவானுக்கு படைப்பார்கள். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல். இந்த நாள் விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளை கொண்டாடும் பொங்கலாகும். மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கரித்து பொங்கல் செய்து படைப்பார்கள். நான்காவது நாள் காணும் பொங்கல். இந்நாளில் குடும்ப உறவினர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவார்கள். தமிழகத்தில் தை பொங்கல் திருநாள் போன்று வட இந்தியாவில் மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

ஆந்திரா

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தமிழகத்தைப் போலவே போகி கொண்டாடி பழைய பொருட்களை எரிக்கின்றனர். இரண்டாவது நாள் மகர சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். மூன்றாவது நாள் கனுமா என்று அழைக்கப்படுகிறது . இந்நாளில் கால்நடைகளுக்கு உணவளித்து கொண்டாடப்படுகிறது. நான்காவது நாள் வீர விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இந்நாளின் பெயர் முக்கனுமா.

குஜராத்:

குஜராத்தில் மகர சங்கராந்தி அல்லது உத்ராயன் என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் முதல் நாளான உத்ராயன் பண்டிகை அன்று பட்டங்களை விட்டு கொண்டாடுகின்றனர். இரண்டாவது நாள் வாசி உத்ராயன் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் குளிர்கால காய்கறிகள், எள்ளு விதைகள், கடலை, வெல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி உந்திலு என்ற உணவு தயாரித்து கொண்டாடுகின்றனர்.

பீகார்-ஜார்க்கண்ட்

பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் இப்பண்டிகை சக்ராத் அல்லது கிச்சடி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதில் முதல் நாளான, மகர சங்கராந்தியன்று மக்கள் நதிகளில் நீராடிவிட்டு எள் மற்றும் வெல்லம் கொண்டு எள் உருண்டைகளை செய்து மற்றவர்களுக்கும் வழங்கி கொண்டாடுகிறார்கள். இரண்டாம் நாள் மக்ராத் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் பருப்பு, அரிசி, பட்டாணி போன்றவற்றை கொண்டு கிச்சடி சமைத்து இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

மராட்டியம் மற்றும் கோவாவில், இந்த பண்டிகையானது ஹல்டி குங்கும் அல்லது மகே சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. மராட்டியத்தில் பிரம்மாண்டமாக கொண்டாப்படும் பண்டிகை என்றால் அது மகர சங்கராந்திதான்.

இந்த மாநிலத்தில் இந்த பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் எள் உருண்டை, அல்வா, போலி போன்றவற்றை செய்து சாப்பிடுகின்றனர். இங்கு முதல் நாள் போகி என்றும், இரண்டாம் நாள் சங்க்ரந்த் மற்றும் மூன்றாம் நாள் கிங்க்ராண்ட் என்று அழைக்கப்படுகிறது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தில் அறுவடை பண்டிகை போயுஷ் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் ஸ்பெஷல் என்றாலே இனிப்பு வகைகள்தான். இங்கு புலி பித்தே, பாடிசப்தா, மால்போவா, நர்கெல் நாடு, டில் நாடு ஆகிய இனிப்புகள், பண்டிகையின்போது செய்யப்படும் இனிப்பு உணவுகள் ஆகும்.

பஞ்சாப்பில் லோஹ்ரி என்னும் பண்டிகை ஜனவரி 13 ஆம் தேதி வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. லோஹ்ரிக்கு அடுத்த நாள் மகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும் பஞ்சாபின் சில பகுதிகளில் லோஹ்ரி அன்று பட்டம் விட்டு கொண்டாடுவார்கள். அன்று இரவு மக்கள் நெருப்பை கொளுத்தி கடவுளை வணங்குவார்களாம்.

கர்நாடகாவில் அறுவடைத் திருநாள் சுக்கி என்ற பெயலும், இமாச்சல பிரதேசத்தில் மகா சாஜி என்ற பெயரிலும், அசாமில் மாக் பிஹூ அல்லது போஹாலி பிஹூ என்ற பெயரிலும் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.


Next Story