காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : மணிகா பத்ரா காலிறுதிக்கு தகுதி - ஷரத் கமல், சத்யன் இணை வெற்றி

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர்.
Image Tweeted By @Media_SAI
Image Tweeted By @Media_SAI
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

8-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. நேற்று முதல் சுற்று (ரவுண்டு ஆப் 32) நடந்து முடிந்ததை அடுத்து இன்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா இணை இரண்டாவது சுற்றில் மலேசியாவின் ஃபெங் சீ லியோங் மற்றும் யிங் ஹோ ஜோடியை எதிர்கொண்டனர்.

இந்த போட்டியில் தொடக்கத்தில் தடுமாறிய இந்திய இணை பின்னர் சிறப்பாக விளையாடினர். இறுதியில் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா இணை 5-11, 11-2, 11-6 மற்றும் 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினர்.

அதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் அசத்திய இந்தியாவின் பதக்க நம்பிக்கை மணிகா பத்ரா 2-வது சுற்றில் மின்ஹியுங் ஜீயை எதிர்கொண்டார்.இந்த போட்டியில் மணிகா 4-0 (11-4, 11-8, 11-6, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதே போல் மற்றொரு பெண்கள் ஒற்றையர் போட்டியில் 2-வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதே போல் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் இந்தியாவின் ஷரத் கமல் மற்றும் சத்யன் ஜோடி 3-0 (11-6, 11-1, 11-4) என்ற கணக்கில் வங்காளதேசத்தின் ரஹ்மான் பாம், மொஹ்சின் அகமது ரிடோய் இணையை வீழ்த்தினர். இதன் மூலம் ஷரத் கமல் மற்றும் சத்யன் இணை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com