

புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் மாவட்டத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மதியம் பா.ஜனதா தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை 'ரோடு ஷோ' மற்றும் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அவர் புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஹெலிபேடு மைதானத்துக்கு மதியம் 3 மணியளவில் வந்து இறங்கினார்.
அப்போது அங்கு தயாராக இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் நின்ற பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஹெலிகாப்டரில் இருந்த பைகள் மற்றும் உடைமைகளை திறந்து தீவிர சோதனை செய்தனர். சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த சோதனையின் முடிவில் எதுவும் சிக்கவில்லை. பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு அண்ணாமலை ஒத்துழைப்பு அளித்தார். பின்னர் பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதனை தொடர்ந்து அண்ணாமலையும் பிரசாரத்துக்காக திருநள்ளாறுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.