நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக தேர்தல் பிரசாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு
Published on

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. அரசியல் கட்சியினர் மும்மரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நெல்லை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார்நாகேந்திரன் நேற்று வள்ளியூர் அருகே உள்ள கன்னங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இரவு 10 மணிக்கு பின்னர் அங்குள்ள நபர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். இது தேர்தல் விதிமுறைக்கு முரணானது தேர்தல் பிரசார நேரத்தை தாண்டி பிரசாரம் செய்கிறார் என்று வள்ளியூர் பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக தேர்தல் பிரசாரம் செய்ததாக நயினார்நாகேந்திரன் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com