டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை சாய்ப்பது... இந்த இந்திய வீரரே; ரிக்கி பாண்டிங் கணிப்பு

ICC T20 World Cup top wicket taker... this Indian player; Ricky Ponting Prediction
டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை சாய்ப்பது... இந்த இந்திய வீரரே; ரிக்கி பாண்டிங் கணிப்பு
Published on

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த, உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர் பற்றிய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

அவர் வேறு யாருமல்ல. இந்தியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, பாண்டிங்கின் தேர்வாக உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டி தொடரில், 13 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை பும்ரா எடுத்துள்ளார். ரன்களை குறைவாக கொடுத்தும், 6.48 என்ற பந்துவீச்சு விகிதமும் வைத்துள்ளார்.

இதனை கவனத்தில் கொண்டு பாண்டிங் கூறும்போது, பல ஆண்டுகளாக பந்துவீசி வரும் அவர் திறமையாக செயல்பட்டு, வருகிறார்.

சிறந்த முறையில் விளையாடி இருக்கிறார். பும்ராவின் சிறந்த நிலை, வேகம், யார்க்கர் பந்து வீசுதல் மற்றும் தகுதி ஆகியவை இந்திய அணி எப்படி போட்டியில் விளையாடும் என முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு காயத்தினால் அவர் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டி தொடரில் விளையாடவில்லை. இதனால், அரையிறுதியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியால் இந்தியா தோல்வியை சந்தித்தது. அவர் விளையாடாதது உண்மையில் போட்டியில் எதிரொலித்தது. இந்திய அணி வீரர்களும் அதனை உணர்ந்தனர்.

தொடர்ந்து பாண்டிங் கூறும்போது, அவர் போட்டியில் என்ன செய்வார். புதிய பந்து, சுழலும் வகையில் பந்து வீசுவார். ஐ.பி.எல். தொடர் முடிவில், ஓவர் ஒன்றுக்கு 7 ரன்களுக்கும் குறைவாகவே கொடுத்திருக்கிறார்.

விக்கெட்டுகளை எடுக்கிறார். கடுமையான ஓவர்களையும் வீசியிருக்கிறார். இதுபோன்ற தருணங்களில் விக்கெட்டுகளையும் நீங்கள் எடுக்க முடியும். அதனால், என்னுடைய தேர்வு பும்ரா என்று கூறியுள்ளார்.

ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந்தேதி தொடங்கி ஜூன் 29-ந்தேதி வரை நடைபெறும்.

இந்தியாவுக்கான முதல் போட்டி அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் 5-ந்தேதி நியூயார்க்கில் கட்டப்பட்டு உள்ள நஸ்சாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும். இதேபோன்று, ஆவலாக எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி ஜூன் 9-ந்தேதி நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com