ஜாம்பவான்கள் சச்சின், யுவராஜ் சிங்கின் சாதனையை முந்திய 12 வயது சிறுவன்

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜாம்பவான்கள் சச்சின், யுவராஜ் சிங்கின் சாதனையை முந்திய 12 வயது சிறுவன்
Published on

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இதில் நடைபெற்ற மும்பை - பீகார் இடையேயான ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி என்ற 12 வயதே நிரம்பிய சிறுவன் பீகார் அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். இவர் அந்த ஆட்டத்தில் 19, 12 ரன்கள் அடித்தார். இருப்பினும் அவர் இந்திய ஜாம்பவான்களான சச்சின் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையை தகர்த்துள்ளார்.

அதாவது ரஞ்சி கிரிக்கெட்டில் இளம் வயதில் அறிமுகம் ஆன வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் யுவராஜ் சிங்கை முந்தியுள்ளார் வைபவ். யுவராஜ் சிங் அறிமுகம் ஆனபோது அவருடைய வயது 15 வருடங்கள் 57 நாட்கள். சச்சின் அறிமுகம் ஆனபோது அவருடைய வயது 15 வருடங்கள் 230 நாட்கள். ஆனால் வைபவ் அறிமுகம் ஆனபோது அவருடைய வயது 12 வருடங்கள் 284 நாட்கள் மட்டுமே. இதன் மூலம் இவர் சச்சின் மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனையை முந்தியுள்ளார்.

மொத்தத்தில் இந்த பட்டியலில் வைபவ் 4-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அலிமூதின் 12 வருடங்கள் 73 நாட்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com