

டுப்லின்,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
அயர்லாந்தின் பிரிடி நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதேவேளை, இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் 47 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்துள்ளது.
சிறப்பாக ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராகிம் அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார். அயர்லாந்து தரப்பில் அந்த அணியின் மார்க் அதிர், ஜெய் முந்திரா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 33.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.