

கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி (52) அரை சதம் கடந்தார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ரிஷாப் பண்ட்(52) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (33) இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட தொடங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிராண்டன் கிங் (22) மற்றும் மேயர்ஸ் (9) ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் நிகோலஸ் பூரன் 62 ரன்கள் (41 பந்துகள் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்து அரை சதம் விளாசி ஆட்டமிழந்து உள்ளார்.
இதேபோன்று மற்றொரு வீரரான ரோவ்மேன் பவெல் 68 ரன்கள் (36 பந்துகள் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) எடுத்து அரை சதம் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார். பொல்லார்டு 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்களை எடுத்துள்ளது. இதனால், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி உள்ளது.