’17-வது ஓவர்தான் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்தது’ - தோல்விக்கு பிறகு ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி

இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வருவோம் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
ஷ்ரேயாஸ் அய்யர்
Published on

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, 17-வது ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்று இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

191 ரன்கள் என்ற இலக்கை

மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. பின்னர் 191 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தெல்லின் அதிரடியான இன்னிங்ஸால் ஒரு ஓவர் மீதமிருக்கும்போதே வெற்றியை தன் வசப்படுத்தியது.

17-வது ஓவரே திருப்புமுனை

போட்டிக்கு பிறகு பேசிய ஷ்ரேயாஸ் அய்யர், "ஆட்டம் எங்கே எங்களிடம் இருந்து நழுவியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வீரரை மட்டும் குற்றம் சாட்ட நான் விரும்பவில்லை. முதல் 'நோ-பால்'க்குப் பிறகு அவர் வலுவாக மீண்டு வருவார் என்று நம்பினேன். ஆனால் 17-வது ஓவர்தான் எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், இந்த அனுபவத்தில் இருந்து அவர் நிறைய கற்றுக்கொள்வார்," என்று கூறினார்.

பெத்தெல்லுக்கு பாராட்டு

மேலும் அவர் கூறுகையில், "முதல் 15 ஓவர்கள்வரை போட்டி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு ஜேக்கப் பெத்தெல் அபாரமாக பேட்டிங் செய்தார். அவரது ஆட்டம்தான் போட்டியின் போக்கை மாற்றியது. அதற்கான முழு பாராட்டும் அவருக்கே சேரும்," என்றார்.

மீண்டு வருவோம்

இந்த தோல்வி ஏமாற்றம் அளித்தாலும், இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவோம் என்றும் ஷ்ரேயாஸ் அய்யர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com