4வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் அரைசதம் - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 219/7

இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ராஞ்சி,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதில் கிராவ்லி 42 ரன், டக்கட் 11 ரன், போப் 0 ரன்னுக்கு ஆட்டம் இழந்தனர். இதையடுத்து அனுபவ வீரர் ஜோ ரூட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் பேர்ஸ்டோ 38 ரன், ஸ்டோக்ஸ் 3 ரன், போக்ஸ் 47 ரன், ஹார்ட்லி 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ராபின்சன் களம் இறங்கினார்.

நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவரது முதல் சதம் இதுவாகும். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 106 ரன், ராபின்சன் 31 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் ரூட் 122 ரன், ராபின்சன் 58 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். கில் - ஜெய்ஸ்வால் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் கில் 38 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஒரு முனையில் ஜெய்வால் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. கில் அவுட்டான பின் களம் இறங்கிய படிதார் 17 ரன், ஜடேஜா 12 ரன், சர்பராஸ் கான் 14 ரன், அஷ்வின் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 73 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து துருவ் ஜூரெல் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஜூரெல் 30 ரன், குல்தீப் யாதவ் 17 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com