5வது 20 ஓவர் போட்டி; ரோகித்துக்கு பதிலாக ராகுல் கேப்டனாக செயல்படுவார்: பி.சி.சி.ஐ.

நியூசிலாந்துக்கு எதிரான 5வது 20 ஓவர் போட்டியில் ரோகித்துக்கு பதிலாக ராகுல் கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
5வது 20 ஓவர் போட்டி; ரோகித்துக்கு பதிலாக ராகுல் கேப்டனாக செயல்படுவார்: பி.சி.சி.ஐ.
Published on

புதுடெல்லி,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரு ஆட்டங்களில் சூப்பர் ஓவர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தியது. இதனால் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கினார்.

டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 5வது 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக போட்டியில் கே.எல். ராகுல் கேப்டனாக களத்தில் செயல்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

போட்டியின்பொழுது ரோகித் 60 (41 பந்துகள்) எடுத்திருந்த நிலையில் ஏற்பட்ட காயத்தினால் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். தொடர்ந்து போட்டியின் 16வது ஓவரில் விளையாடி ஒரு ரன் எடுத்தபொழுது காயத்தினால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.

இந்த போட்டியில் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை எடுத்த 8வது இந்தியர் என்ற பெருமையை ரோகித் பெறுகிறார். டி20 போட்டியில் அதிக அளவில் அரை சதம் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். தொடர்ந்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com