பலாத்கார வழக்கு; நேபாள கிரிக்கெட் வீரருக்கு கூடுதலாக 5 நாட்கள் போலீஸ் காவல் விதிப்பு

நேபாள முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மைனர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கூடுதலாக 5 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
பலாத்கார வழக்கு; நேபாள கிரிக்கெட் வீரருக்கு கூடுதலாக 5 நாட்கள் போலீஸ் காவல் விதிப்பு
Published on

காத்மண்டு,

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக விளையாடியவர் சந்தீப் லமிச்சானே (வயது 22). இவர் மீது, 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை அடுத்து ஆகஸ்ட் 21-ந்தேதி காத்மண்டு ஓட்டல் ஒன்றில் தம்மை ரூமுக்கு அழைத்து சந்தீப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்தீப் மீது நேபாள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்றன.

இதனை அடுத்து சந்தீப்புக்கு காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. கடந்த மாதம் நேபாளத்தில் இருந்து புறப்பட்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று விட்டு காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, கடந்த 6-ந்தேதி நேபாள போலீசார் அவரை கைது செய்தனர். முழு விசாரணை முடியும் வரை நேபாள கிரிக்கெட் வாரியம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

அவர் போலீசார் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்தது. எனினும், அவர் இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கூடுதல் போலீஸ் காவலுக்கு அனுமதி தர வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் சந்தீப் லமிச்சானேவுக்கு கூடுதலாக 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதனை லமிச்சானேவின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 44 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com