

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி, ஜப்பான் அணிக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் ஆண்கள் அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக நேருக்கு நேர் மோதும் இந்தப் போட்டி, வரும் செப்டம்பர் 22, 2026 அன்று ஜப்பானின் சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி சுசுகி கோப்பை” என அழைக்கப்படுகிறது.
இந்தப் போட்டி கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ஒரு சாதாரண தொடராக மட்டும் இல்லாமல், இந்தியா–ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கமாக இந்த போட்டி அமைகிறது. இதன் மூலம் விளையாட்டின் வழியாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.