

சென்னை,
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 தொடருக்கான முன்னோட்டமாக, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகள் பங்கேற்கும் முக்கியத்துவம் வாய்ந்த டி20 சர்வதேச முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று அணிகளும் 2027 உலகக் கோப்பையை இணைந்து நடத்த உள்ளன. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், இந்த முத்தரப்பு தொடர் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகள் முதன்முறையாக டி20 சர்வதேச முத்தரப்பு தொடரில் மோதுகின்றன. இன்று தொடங்கும் இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை விளையாடும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் நமீபியாவின் விண்ட்ஹோக்கில் உள்ள நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நமீபியா அணிகள் மோதுகின்றன.