

பெங்களூரு,
இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து களமிறங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எஸ்.பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தத் தொடருக்குப் பிறகு அடுத்த 10 டி20 போட்டிகளிலும் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும். அதன்பிறகு சஞ்சு சாம்சன் தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை என்றால், அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை அணியில் தேர்வு செய்யலாம்.
இருவரையும் ஒரு தொடரில் மாற்றி, அடுத்த தொடரில் மற்றொருவரை களமிறக்குவது போன்ற அணுகுமுறையைப் பின்பற்றாமல், இதுபோன்ற ஒரு நடைமுறையை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். சஞ்சு சாம்சனுக்கு இதுவரை நடந்த விதம் நியாயமற்றதாகவே நான் கருதுகிறேன்.
சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அரைசதமும் அடித்துள்ளார். எனவே, இந்த ஆண்டு இறுதி வரை அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் ஏற்கனவே 2 சதங்களை விளாசியதுடன், இந்திய அணிக்கு உலகக் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.என தெரிவித்துள்ளார்.