சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆப்கானிஸ்தான் வீரர்...?

சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முகமது நபி ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: @ACBofficials
Image Courtesy: @ACBofficials
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் முகமது நபி (வயது 39). இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக தற்போது வரை 3 டெஸ்ட், 165 ஒருநாள் மற்றும் 128 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முகமது நபி ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் இதை உறுதிப்படுத்தியுள்ளார். டி20 போட்டிகளில் நபி தொடர்ந்து விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் கூறியதாவது, ஆமாம், நபி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது விருப்பத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்பு இதை எங்களிடம் தெரிவித்தார். டி20யில் அவர் விளையாடுவார் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com