அஸ்வின்-ஜடேஜா அபார பந்துவீச்சு; 2வது இன்னிங்சில் திணறும் நியூசிலாந்து

இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கில் 31 ரன்னுடனும், பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் லாதம் 1 ரன்னிலும், கான்வே 22 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வில் யங் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ரச்சின் ரவீந்திரா 4 ரன், டேரில் மிட்செல் 21 ரன், ப்ளெண்டல் 4 ரன், பிலிப்ஸ் 26 ரன், இஷ் சோதி 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய வில் யங் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து மேட் ஹென்றி மற்றும் அஜாஸ் படேல் களம் இறங்கினர்.

இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சில் 43.3 ஓவர்களில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 7 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து இதுவரை 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com