ஆசிய கோப்பை: இந்திய அணியில் ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் இடம்பெற வாய்ப்பில்லை..?

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர். இந்த அணியில் யார் -யாரெல்லாம்? இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்னதாக ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின் படி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இவர்களை பரிசீலிக்க தேர்வுக்குழு விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது. சமீப காலமாக இந்திய டி20 அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களையே தேர்வுக்குழு பரிசீலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






