ரஞ்சி கிரிக்கெட்டில் பாபா சகோதரர்கள் சதம்: ரஹானே, புஜாரா ஏமாற்றம்

தமிழகத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்களான பாபா அபராஜித், பாபா இந்திரஜித் சதம் விளாசினர்.
ரஞ்சி கிரிக்கெட்டில் பாபா சகோதரர்கள் சதம்: ரஹானே, புஜாரா ஏமாற்றம்
Published on

ஆமதாபாத்,

38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கியது. கவுகாத்தியில் நடக்கும் சத்தீஷ்காருக்கு (எச் பிரிவு) எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. இரட்டை சகோதரர்களான பாபா அபராஜித் (101 ரன், 197 பந்து, 8பவுண்டரி, 2 சிக்சர்) , பாபா இந்திரஜித் (127 ரன், 141 பந்து, 21 பவுண்டரி) சதம் விளாசினர். அபராஜித்துடன், ஷாருக்கான் (28 ரன்) களத்தில் உள்ளார்.

இதே பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி 251 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. தனது அறிமுக ரஞ்சி ஆட்டத்திலேயே இரு இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனை படைத்த டெல்லி வீரர் யாஷ் துல் இந்த முறை 5 ரன்னில் கேட்ச் ஆகிப்போனார்.

ஆமதாபாத்தில் தொடங்கியுள்ள ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் (டி பிரிவு) நடப்பு சாம்பியனான சவுராஷ்டிரா அணி 4 விக்கெட்டுக்கு 325 ரன்கள் சேர்த்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தடுமாறியதால் உள்ளூர் போட்டிக்கு திரும்பிய புஜாரா 8 ரன்னில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதே போல் கோவாவுக்கு எதிராக (டி பிரிவு) களம் இறங்கிய 41 முறை சாம்பியனான மும்பை அணி 52.4 ஓவர்களில் 163 ரன்னில் சுருண்டது. சர்ப்ராஸ் கான் (63 ரன்) தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. இந்திய மூத்த வீரர் அஜிங்யா ரஹானே டக்-அவுட் ஆனார். அவரை வேகப்பந்து வீச்சாளர் லக்ஷய் கார்க் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com