

இஸ்லாமாபாத்,
2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) தொடரில் பெஷாவர் சால்மி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் அசாம், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட்டதற்காக செய்தியாளர் ஒருவரிடம் கோபமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு சீசனில் பெஷாவர் சால்மி அணி தொடக்கம் முதலே நல்ல வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் கிங்ஸ்மென் அணியை எதிர்கொண்ட அந்த அணி, 146 ரன்கள் என்ற இலக்கை கடைசி பந்தில் எட்டி திரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பாபர் அசாம் 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தாலும், ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று முடிக்க முடியாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், இருவரும் ஒரே மாதிரியான ஷாட்களை விளையாடுகிறீர்கள். ஆனால் அவரைப் போல போட்டியை முடிக்கும் திறன் உங்களிடம் குறைவாக உள்ளதாக மக்கள் ஒப்பிடுகின்றனர் என கேட்டதற்கு, “இந்த மாதிரியான ஒப்பீடுகளை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்” என பாபர் அசாம் பதில் அளித்தார்.