

மிர்பூர்,
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழை மற்றும் வெளிச்சமின்மையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 179 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.
முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, நஜ்முல் ஹொசைனின் (101) சதம் மற்றும் முஷ்பிகுர் ரஹிமின் (71) அரைசதத்தால் 413 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் அசான் அவாய்ஸின் (103) சதத்தால் 386 ரன்கள் எடுத்தது. வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் மஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
27 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன், முகமது அப்பாஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம், ஹசன் அலி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது கைக்கோர்த்த மொமினுல் ஹக் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஜோடி, நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடியது. ஆட்டத்தின் இடையே பாகிஸ்தான் வீரர்கள் விட்ட இரண்டு கேட்ச் வாய்ப்புகளைப் (15 மற்றும் 43 ரன்களில்) பயன்படுத்திக் கொண்ட மொமினுல் ஹக் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதியில் 152 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் மொமினுல் ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக வெறும் 49 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. நஜ்முல் ஹொசைன் அரைசதத்துடன் களத்தில் உள்ளார்.
தற்போது 179 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால், நான்காம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி பாகிஸ்தானுக்குக் கடினமான இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.