வரதட்சணை கேட்டு கொடுமை; வங்காளதேச கிரிக்கெட் வீரர் மொசாடெக் மீது மனைவி புகார்

வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வீட்டை விட்டு வெளியேற்றினார் என வங்காளதேச கிரிக்கெட் வீரர் மொசாடெக் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
வரதட்சணை கேட்டு கொடுமை; வங்காளதேச கிரிக்கெட் வீரர் மொசாடெக் மீது மனைவி புகார்
Published on

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் வீரர் மொசாடெக் உசைன் சாய்கட் (வயது 22). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் உறவுமுறையான ஷர்மின் சமீரா உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், வரதட்சணை கேட்டு தன்னை கணவர் கொடுமை செய்கிறார் என்று மொசாடெக்கின் மனைவி புகார் அளித்துள்ளார். இதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான உஷாவின் வழக்கறிஞர், மொசாடெக் உசைன் கடந்த ஆகஸ்டு 15ந்தேதி 12 ஆயிரத்து 3 அமெரிக்க டாலர் வரதட்சணை கேட்டு உஷாவை கொடுமைப்படுத்தி பின் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுபற்றிய கேள்விக்கு உசைன் தரப்பில் இருந்து உடனடியாக எந்தவித பதிலும் இல்லை.

இந்த நிலையில், உசைனின் சகோதரர் மொசாபர் உசைன் கூறும்பொழுது, அவர்கள் இருவரும் திருமணம் நடந்ததில் இருந்து மோதல் போக்குடனேயே இருந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு 15ந்தேதி மொசாடெக் அவரது மனைவிக்கு விவாகரத்து கடிதம் அனுப்பினார். ஆனால் திருமண ஆவணங்களில் குறிப்பிட்ட தொகையை விட உஷா கூடுதல் பணம் கேட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

அந்த பணத்தினை பெற முடியாத உஷா பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி இந்த வழக்கை தொடங்கியுள்ளார் என்றும் மொசாடெக்கின் சகோதரர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பர் 13ந்தேதி முதல் 28ந்தேதி வரை நடைபெற உள்ள 50 ஓவர் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வங்காளதேச அணியில் மொசாடெக் இடம்பெற்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com