உலகக்கோப்பை வென்ற ஜூனியர் மகளிர் அணிக்கு பரிசுத்தொகை அறிவித்தது பி.சி.சி.ஐ.

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய அணி வென்றுள்ளது.
Image CourtacyL BCCI
Image CourtacyL BCCI
Published on

புதுடெல்லி,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வந்தது. இதில் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணி 82 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கங்கோடி திரிஷா 3 விக்கெட்டுகளும், வைஷ்ணவி சர்மா, ஆயூஷி சுக்லா மற்றும் பருனிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 83 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 11.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 84 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக திரிஷா 44 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் தொடர்ந்து 2வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடரின் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையாக கொங்காடி திரிஷா பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்களும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்களும் எடுத்து அசத்தி இருந்தார்.

அதேபோல், இந்தத் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் மற்றொரு இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா, மலேசியா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது உட்பட மொத்தமாக 17 விக்கெட்டுகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.

இந்த வெற்றியின் மூலம், 2023-ம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையைத் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகக்கோப்பை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com