

லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி வீரர்கள் நிலைத்து விளையாடினர். பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடக்க விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேக்கப் பெத்தேல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பென் டக்கெட் சதமடித்து அசத்தினார் . அவர் 141 ரன்களுக்கு வெளியேறினார் .
பின்னர் வந்த ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது.