

செயின்ட் கிட்ஸ்,
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் லூசியா கிங்சை வீழ்த்தி நெவிஸ் பேட்ரியாட்ஸ் அபார வெற்றி பெற்றது.
14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 25வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துஷன் சனகா அதிகபட்சமாக 121 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய லூசியா கிங்ஸ் 13.5 ஓவரில் 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் டிம் சைபர்ட் அதிகபட்சமாக 50 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் வீரர் ஜெரேமியா லூயிஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் செயின்ட் லூசியா கிங்சை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அபார வெற்றிபெற்றது.