மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்.. வெளியான தகவல்

கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

சென்னை,

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் செப்டம்பரில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் வெற்றி பெற்ற அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.

இதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு தொடங்கபட்ட இந்த தொடர் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்த தொடர் இந்தியா அல்லது தென் ஆப்பிரிக்காவில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடைபெற்று வந்தன. ரசிகர்களின் போதிய ஆதரவின்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகள் காரணமாக 2015-ம் ஆண்டு இந்த தொடர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

2009 - 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடரில் ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 2 கோப்பைகளை வென்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரை மீண்டும் நடத்த இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதன் முதல் வெற்றியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்த தொடரை மீண்டும் நடத்த அனுமதி அளித்துள்ளதாக வந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com