சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

மும்பை,

அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

கோப்பையை வென்ற இந்திய அணியை பல தரப்பினரும் பாராட்டினர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய அணிக்கு ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இது இந்த தொடரில் இடம்பெற்றிருந்த வீரர்கள்,பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com