வாக்குவாதத்தில் ஈடுபட்ட கான்ஸ்டாஸ்... அடுத்த பந்திலேயே பதிலடி கொடுத்த பும்ரா.. என்ன நடந்தது..?

இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது டெஸ்ட் இன்று தொடங்கியது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார்.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடித்துள்ளது. கான்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பும்ரா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை பும்ரா வீச தயாரானபோது பேட்ஸ்மேன் கவாஜா ரெடியாகவில்லை. இதனால் பும்ரா ஏதோ கூறியவாறு பந்து வீச முயற்சித்ததை நிறுத்தி பின்னால் சென்றார். ஆனால் பவுலிங் முனையிலிருந்த சாம் கன்ஸ்டாஸ் பும்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே கள நடுவர் உள்ளே புகுந்து இருவரையும் சமாதானம் செய்தார்.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அடுத்த பந்தை (6-வது பந்து) வீசிய பும்ரா கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். இதனை ஒட்டுமொத்த இந்திய அணியும் வெறித்தனமாக கொண்டாடியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com