சர்ச்சைக்குரிய சைகை: பாக்.வீரர்கள் மீது நடவடிக்கை கோரி பி.சி.சி.ஐ. புகார்

ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
துபாய்,
நடப்பு ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தின் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்களான சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரவூப் மீது நடவடிக்கை கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.
இவர்களில் ஹாரிஸ் ரவூப் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போல சைகை செய்து காட்டி இந்திய ரசிகர்களை சீண்டினார். மறுபுறம் பர்ஹான் அரைசதம் அடித்ததும் துப்பாக்கியை வைத்து சுடுவதுபோல் கொண்டாடினார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது. அத்துடன் அவர்கள் செய்த சைகையின் வீடியோ காட்சிகளை ஆதாரமாக பி.சி.சி.ஐ. சமர்ப்பித்துள்ளது.






